தனிக்குடித்தனம்
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு டாக் ஷோ (talk show) பார்த்தேன்.
சிலர் இந்த நிகழ்ச்சியை கூட பார்த்திருக்க கூடும்.தலைப்பு நன்றாக இருந்தால் நான் ரசித்து பார்ப்பது உண்டு.
இந்த முறை தலைப்பு தனிக்குடித்தனம் பற்றியது.
அதில் ஒரு பக்கம் கல்லூரி மாணவிகளும் மற்றொரு பக்கம் திருமண வயதில் பையன் இருக்கும் அம்மாக்களும் பங்கேற்றனர்.அம்மாக்கள் என்றால் அவர்களும் 45 வயது உடையவர்கள் தான்.சிலர் அழகாக சுடிதாரிலே கூட வந்திருந்தார்கள்.
எனது ஆதங்கம் என்னவென்றால் இக்கால பெண்கள் நடந்து கொள்ளும் முறை தான்.அனைத்து பெண்களும் கூட்டு குடும்பம் பெரிய சுமை என்றும் ப்ரைவசியே கிடைக்காது என்றுமே சொன்னார்கள்.
அதற்கு அவர்கள் உபயோகப்படுத்திய வார்த்தை முறைகள் தான் கேட்க சகிக்கவில்லை.மாமியார்களுக்கு வடித்து கொட்ட முடியாது,கூட்டம்,பட்டாளம்,கும்பல் என்று மிக அழகாக குடும்பத்தை வர்ணித்தார்கள்.
நிகழ்ச்சி நடத்துபவரே திகைக்கும் அளவில் தான் வார்த்தை பிரயோகம் எல்லாம்.
அதற்கு எதிரணியும் பதிலடி குடுத்தார்கள்.
யோசித்து பார்த்தால் இக்கால பெண்கள் சொன்ன எதுவுமே நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியபடாது.
முழுக்க முழுக்க திரைப்படங்களை பார்த்து மனதில் பொய்யான கற்பனைகளை வளர்த்து கொள்கிறார்கள் என்று அவர்கள் பேச்சிலே தெரிகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் தனிக்குடித்தனத்தை விரும்புவதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இதோ:
1. கணவனை பேர் சொல்லி உரிமையாக அழைக்க முடியாது.(அனைத்து பெண்களுமே அவன் இவன் என்று தான் சொன்னார்கள்)
2. மாமியார், மாமனார் எதிரில் காலை நீட்டி சோபாவில் படுக்க முடியாது.
3. காலையில் லேட்டாக தான் எழுவோம்.
4. எங்கள் சம்பளத்தை இஷ்டம் போல் தான் செலவு செய்வோம்.(கணவன் மனைவி இருவர் சம்பளத்தையும் சேர்த்து தான்)
5. ஆண் நண்பர்களை வீட்டிற்கு கூட்டி வர முடியாது.
6. பெண்ணுடைய பெற்றோர்கள் தங்க முடியாது.
இப்படி நீண்டது லிஸ்ட்.
அதில் அப்பாவி கணவர்கள் செய்ய வேண்டியது ஒரு லிஸ்ட்.
1. காலையில் ரொமான்ஸ்
2. சமையல்
3. ஆஃப்சிற்கு பிக்கப் டிராப்
4. வெள்ளிக்கிழமை மூவி
5. வீகெண்ட் டின்னர், பார்ட்டி,அவுட்டிங்
6. சர்ப்ரைஸ் கிஃப்ட்
இதில் மற்ற விஷயங்கள் கூட சரி தான்.ஆனால் சமையல், காலையில் ரொமான்ஸ் தான் இடிக்கிறது.
பொதுவாக இருவருமே வேலைக்கு செல்லும் போது காலை நேர பரபரப்பில் இதற்கெல்லாம் நேரம் கிடைக்குமா என்ன??
சமையலில் உதவுவார்களே தவிர எந்த கணவனும் முழு நேரம் மனைவியை உட்கார வைத்து சமைத்து தர முன் வர மாட்டார்கள்.
இந்த ஷோவை பார்த்தால் அதில் பேசிய பெண்களை கட்டி வைக்க பையனை பெற்ற அம்மாக்கள் ரொம்பவே யோசிப்பார்கள்.
பணி நிமித்தம் வெளிநாடுகளிலும் ,வெளியூர்களிலும் தனியாக இருப்பவர்களுக்கு தான் தெரியும் கூட்டு குடித்தனத்தின் அருமை.
தனியாக வாழும் அனைவரும் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலாவது வீட்டினரின் தேவையை உணர்வார்கள்.
குறிப்பாக பெரியவர்களை அவர்களின் வழிகாட்டுதல் இருந்தாலே நாம் நமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லலாம்.
இதுவரையில் நானும் எனது கணவரும் ஊரில் உள்ள எங்களது பெற்றோரை ஆலோசிக்காமல் எந்த முக்கிய முடிவும் எடுக்க மாட்டோம்.
நமது கண்ணோட்டம் ஒரு மாதிரி என்றால் அவர்கள் அந்த விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள்.என்ன இருந்தாலும் அவர்கள் அனுபவம் மிகப் பெரிய பலமல்லவா..
நமது கண்ணோட்டம் ஒரு மாதிரி என்றால் அவர்கள் அந்த விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள்.என்ன இருந்தாலும் அவர்கள் அனுபவம் மிகப் பெரிய பலமல்லவா..
ஒற்றை பிள்ளையாக வளர்ந்த நான் கூட்டு குடித்தனத்தில் திருமணம் செய்து வந்த பொழுது மிகவும் சந்தோஷப்பட்டேன்.இப்பொழுதும் வருட விடுமுறையை நினைத்து தான் மனம் ஏங்குகிறது.
கூட்டுகுடித்தனத்தை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணினால் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.
நமக்கு தேவைபடும் ப்ரைவசியும் அங்கு தானாக கிடைக்கும்.திருமணம் செய்ய போகும் பெண்கள் இதை யோசித்தால் நல்லது.